தேவையான பொருள்கள்:
நிலக்கடலை – 1 கிலோ
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டு (விரும்பினால்)
தேங்காய் – 1 1/2 கப்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.
எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)
இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.
இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.
* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment